ஞாயிறு, அக்டோபர் 30, 2011

முன்னுறை முக்கியம்




வணக்கங்க, எம் பேரு ராமகிருஷ்ணன். ITI வரைக்கும் படிச்சிருக்கேன். பக்கத்து ஊர் சக்கரை ஆலையில மெஷின் ஆப்பரேட்டரா வேலை செய்யறேன். எம் பொண்டாட்டி செங்கமலம், பெரிய பொண்ணு எட்டாவது படிக்கிறா. சின்னவ ஆறாவது. பூர்வீக சொத்துன்னு எதுவுமில்லைன்னாலும், சம்பாதிச்ச பணத்தில ஒரு வீடு, கொஞ்சம் நிலம், ஒரு வண்டின்னு வசதியாத்தாங்க போய்க்கிட்டிருந்தது வாழ்க்கை.

ராமகிருஷ்ணனுக்கு நல்ல மனசுங்க. யாருக்கு கஷ்டம்னாலும் ஓடி வந்து உதவி செய்வான். கஷ்டம்னு கேட்டா காசு குடுப்பான். பொறந்த நாள், தீபாவளி மாதிரி நல்ல நாள்ல அனாத புள்ளைங்களுக்கு சோறு போடுவான். கேசவன் பசங்களுக்கு கூட ஸ்கூல் பீஸ் இவன் தான் கட்டினான். கஷ்டப் பட்டு வளந்தவன் இல்லையா, அதனால மத்தவங்க கஷ்டப்படக் கூடாதுன்னு நெனைப்பான். அவன் பிரச்சினையே அது தான். நானா, நான் துளசிங்கம். ராமகிருஷ்ணன் கூட வேலை செய்யறேன்.

ஒருநாள் ஆலையில வேலை செஞ்சுகிட்டிருக்கும் போது துளசிங்கத்துக்கு அடி பட்டுடுச்சு. அடி கொஞ்சம் பலம் தான். ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு போனோம். ரத்தம் ஏத்தணும்ன்னாங்க. நான் தான் குடுத்தேன். ரெண்டு நாள் கழிச்சு ஆஸ்பத்திரியிலிருந்து எனக்கு போன் பண்ணாங்க. ICTC ங்கற எடத்துக்கு வர சொன்னாங்க. என்னன்னு தெரியலயே, துளசிங்கத்துக்கு இப்போ பரவயில்லையேன்னு யோசனையோடவே போனேங்க."முன்னுறை இல்லன்னா முடிவுரை எயிட்ஸ்" அப்படின்னு சுவத்துல எழுதி இருந்ததுங்க. கூட்டம் அவ்வளவா இல்லை. டாக்டரை போயி பாத்தேங்க. அவர் சொன்னது தான் என் தலையில இடி விழுந்த மாதிரி ஆகிருச்சு. ஆமாங்க. எனக்கு எயிட்ஸ் இருக்குன்னார். செத்துடலாமான்னு ஒரு நிமிஷம் தோணிச்சு. டாக்டர், குடும்பத்தை ஞாபகப் படுத்தி, இதுவும் சாதாரணமான வியாதி தான். ஒழுங்கா மருந்து சாப்பிட்டா, கூட பத்து வருஷம் இருக்கலாம்னு தைரியம் குடுத்தார். என் குடும்பத்துக்கு என்னை விட்டா யாருங்க இருக்கா. நான் தானே அவங்கள பாத்துக்கணும்.

லாரி டிரைவர் சரவணன், ஒரு நா ஆக்சிடெண்ட்ல செத்து போயிட்டான். அவன் பொண்டாட்டி சரசு, பொறந்த ஊருல ஆதரிக்க ஆள் இல்லாததால இங்கயே இருந்துட்டா. புள்ள குட்டி எதுவுமில்ல. பாவம், தனியா தான் கஷ்டப்பட்டா. வயல் வேலைக்கு போயி வயித்த கழுவிகிட்டிருந்தா. நம்ம ராமகிருஷ்ணனுக்கு தான் யாரு கஷ்டப் பட்டாலும் ஆவாதே, அதனால அவளுக்கு அப்பப்போ பணம் காசு குடுப்பான். அவன் அதோட நிறுத்தி இருக்கலாம். தயாள குணம் ரொம்ப அதிகமாகி ராமனா இருந்தவன், கிருஷ்ணனாயிட்டான். அவ மூலமா தான் இந்த வியாதி இவனுக்கு வந்துருக்கு. அவ மட்டும் என்ன பண்ணுவா பாவம். சரவணன் லாரிய எங்க பார்க் பண்ணானோ!

டாக்டர் கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன். அவர் சரசுவ கூட்டிகிட்டு வர சொன்னார். அவளையும் பரிசோதிச்சு பாத்துட்டு அவளுக்கும் எயிட்ஸ் இருக்குன்னார். சரசு மூச்சு முட்ட அழுதா. என்னால தானே உனக்கு வந்தது. நான் உன் வாழ்கையை பாழாக்கிட்டேனேன்னு கதறி அழுதா. நம்மால வேற என்னங்க செய்ய முடியும். டாக்டர் அடுத்து சொன்ன விஷயம் கொஞ்சம் பயங்கரமா இருந்தது. செங்கமலத்தையும் கூட்டிகிட்டு வர சொன்னார். செங்கமலத்துக்கு சரசு விஷயம் தெரியாது. ஆனாலும், அவளாவது நல்லா இருக்கணுமே அப்படின்ற நப்பாசையில, எங்கே போறோம்னு எதுவுமே சொல்லாம அவளையும் கூட்டிகிட்டு டாக்ட்டர்ட்ட போனேன். அவளுக்கும் எயிட்ஸ் இருக்குனு டாக்டர் சொல்லிட்டார். சத்தியமா சொல்றேன். சாமியெல்லாம் இல்லீங்க. இருந்தா இப்படி நடக்குமா? ஒரு வாரத்துக்கு அவ யார் கூடவும் பேசலைங்க. என்னால அவ மொகத்த கூட பாக்க முடியல. ஒரு வாரம் கழிச்சு என் கிட்ட சொன்னா, "அவ ஏன் அங்க தனியா கஷ்டப் படணும். அவளையும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடுங்க". ச்ச! எப்பேர்பட்ட பொண்டாட்டி. இவளுக்கு போய் நான் துரோகம் செஞ்சேனே. இன்னும் ஏழு ஜென்மத்துக்கு எனக்கு நல்ல சாவே வராதுங்க.

சாதாரண ஜுரம் வந்தாலே சரியாக ஒரு மாசம் ஆகும். நிக்காம வயத்தால போகும். ஒரு சின்ன விஷயம்னாலும் உடம்பு தாங்காது. அடிக்கடி ஆஸ்பத்திரி போயி வருவாங்க. இதனால இவங்களுக்கு இந்த வியாதி இருக்கறது அரசால் புரசலா ஊருக்கு தெரிஞ்சு போச்சு. அண்ணே அண்ணேன்னு சுத்தி வந்தவன் எல்லாம் தூர போயிட்டான். அடிக்கடி லீவு போட்டதால வேலை போச்சு. உடம்புல பழைய தெம்பு இல்லாததால, தொடர்ச்சியா எந்த வேலைக்கும் போக முடியல. நிலத்தை வித்து, வண்டியை வித்து சாப்பிட்டாங்க. என்னால முடிஞ்சத அப்பப்போ குடுப்பேன். அதெல்லாம் பத்தாம கஜேந்திரன் கிட்ட கடன் வாங்கினான். கஜேந்திரனா? அவர் ராமகிருஷ்ணனுக்கு பக்கத்து வீட்டுக்காரர். வட்டிக்கு பணம் குடுக்கறவர். வீட்டு பத்திரத்தை வச்சு அப்படி, இப்படின்னு ரெண்டு வருஷத்துல லட்ச ரூபாய்க்கு மேல வாங்கிட்டான். கஜேந்திரனுக்கு பயம் வந்திருக்கும் போல. பொண்ணுக்கு கல்யாணம் பண்ண போறேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா தங்க இடம் வேணும்னு சொல்லி, இவன் வீட்டை எழுதி வாங்கிட்டார். தர வேண்டிய மீதி காசுக்கு ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்க ஒண்ணுக்கும் உதவாத ஆறு ஏக்கர் நிலத்த இவன் பேருக்கு கிரயம் பண்ணி குடுத்துட்டார்.

நாம யார என்னங்க சொல்ல முடியும்? எல்லாம் விதி. பேசவே பயந்த கிராமத்துல குடியிருக்க வீடு தருவாங்களா? அதான் இங்க பக்கத்து டவுனுக்கு, துளசிங்கம் வீட்டுக்கு பக்கத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்துகிட்டு வந்துட்டோம். இங்க நம்ம கதை யாருக்கும் தெரியாதுங்கறதால பிரச்சினை எதுவுமில்லாம நல்லபடியா போயிகிட்டிருக்குது. நான் இப்போ பழ வியாபாரம் செய்யறேன். செங்கமலமும், சரசுவும் வீட்டு வேலை செய்யறாங்க. பசங்க இங்கயே ஸ்கூல்ல படிக்கிறாங்க. பணம் பத்தலன்னா துளசிங்கம் தான் தந்துகிட்டிருக்கான். நாம நல்லா(!) இருந்தா தான் கடவுளுக்கு புடிக்காதே! அங்க கிராமத்துல புதுசா பை-பாஸ் ரோடு வருதாம். நம்ம நிலத்து மேல தான் அது வருதுன்னாங்க. இன்னும் எவ்வளோ கஷ்டப்பட வேண்டி இருக்கோ தெரியலையே. ரெண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன்னா, அடுத்த நாளே செத்துடலாம். ஆனா எப்படி? அந்த நிலம் தான் இருக்கற ஒரே சொத்து, நம்பிக்கை.

ஆனா பாருங்க, ஆறு மாசத்துல சட சடன்னு ரோடு வேலை முடிஞ்சது. ரோடு நிலத்து மேல போகாம நிலத்த ஒட்டி போச்சு. இங்க டவுன்லருந்து மூணு கிலோமீட்டர் ஆச்சா, நல்ல இடம். இத பத்தி என் பிரண்டு கணேசன் கிட்ட சொன்னேன். அவர் ஆடலரசன் ரியல் எஸ்டேட்ல வேலை செய்யறார். அவர் விசாரிச்சுட்டு வந்து "ஏக்கருக்கு ஒரு கோடி வரைக்கும் குடுக்கலாம்" ன்னு சொன்னார்.

அப்புறமென்ன, ஒரு மாசத்துல நிலத்த வித்து பணத்த வாங்கி, சொந்தமா எனக்கும் துளசிக்கும் சேத்து பெரிசா ஒரு வீடு வாங்கி, மீதி பணத்த பேங்க்ல போட்டு, வர்ற வட்டியில சாப்டுகிட்டிருக்கோம். துளசி தான் எவ்ளோ சொல்லியும் கேக்காம அதே சக்கர ஆல வேலைக்கே போய்க்கிட்டிருக்கான். வைத்தியமெல்லாம் ஒழுங்கா நடக்குது. புள்ளைங்க நல்ல ஸ்கூல்ல நல்ல படியா படிக்கிறாங்க. மவராசன் மாதிரி மாப்பிள்ளைங்களை எங்க புள்ளைங்களுக்கு கட்டி வைப்போம்ங்கற நம்பிக்கை இருக்கு. நான் இன்னைக்கே செத்துட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல. சத்தியமா சொல்றேன்,  சாமி இருக்குங்க.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சனி, அக்டோபர் 22, 2011

கலாமுக்கு ஒரு கடிதம்



அய்யா வணக்கங்க,

நல்லா இருக்கீயளா? நீங்க நல்லா இருக்கணுங்க. ஆனா நாங்க இங்க நல்லா இல்லீங்க.எங்க எல்லாருக்கும் சோலி கொடுக்கப் போகுதுன்ற நெனப்போட இருந்த அணு உல , உசுருக்கு உல வச்சிடுமோங்கற பயத்துல நாங்க சோறு தண்ணி இல்லாம கெடக்கோம். சப்பான்ல வந்த சுனாமி எங்க தூக்கத்த காணாக்கிருச்சி.

கொஞ்ச நாள் முன்ன வரை எம் புள்ள  கூட படிக்க  முனுசாமி மவ அனு-வ தவிர வேற எந்த அணு பத்தியும் எனக்கு அவ்வளவா தெரியாது. சப்பான்ல சுனாமி வந்து அதனால அங்க ஆளுங்க பட்ட கஷ்டத்த பாத்து, அய்யய்யோ  நம்ம பக்கத்திலேயே பயங்கரத்த வச்சிருக்கமேன்னு அந்தான்னிக்கு ஒறக்கம் போச்சு. 

அந்தால ரெண்டு பேர் சேந்து பேசினா கூட இத பத்தியே பேச்சுனு ஆகிப் போச்சுங்க. அவங்கவங்க தனக்கு தெரிஞ்சத சொல்லுதாங்க. தெரியாதத தெரிஞ்சவங்கள்ட்டயிருந்து தெரிஞ்சிகிட்டோம்.

அணு தொழில்நுட்பம் எவ்வளவு ஆபத்தானதுன்னு, இப்போ எங்கள்ள ஒருத்தரா இருந்து எங்களுக்காக போராடிக்கிடிருக்க அய்யா உதயகுமாரன் ஜூ.வி-ல அணு ஆட்டம்  னு எழுதின தொடர் கட்டுரை அணுவோட கோர முகத்த புரிய வச்சுது.

வந்த சுனாமியில ஜப்பான் பட்ட கஷ்டத்த பாத்து இனிமே அணு சக்தியே உபயோகிக்க கூடாதுன்னு ஜெர்மனி முடிவு செஞ்சிடுச்சாம். சீனா சூரிய மின்சாரத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சிருச்சாம். நமக்கு எப்பங்க புத்தி வரும்?

உலகத்தோட மின் தேவையில வெறும் ஏழு சதம் மட்டுமே பூர்த்தி செய்யுற இந்த அணு உலைகளுக்காக நாம தர்ற விலை ரொம்ப அதிகம்னு சொல்லுதாங்க. இதுல விலைங்கறது பணம் மட்டுமில்லைன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அணுக்கழிவை என்ன செய்யறதுன்னு யாருக்குமே இன்னும் தெரியாதாமே! அதை வச்சுக்கிட்டு என்னங்க செய்யறது?

அமெரிக்காவுல 30 வருஷத்துக்கு முன்னாலேயே அணு உலை கட்டறத  நிறுத்திட்டாங்களாமே! (அப்புறம் எதுக்கு அந்த கருமாந்திரத்த நம்ம தலையில கொட்டறான்?) இப்போ செயல்பட்டுகிட்டிருக்க அணு உலைகளால வருஷத்துக்கு சுமார் 21000 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் வருதாம். அதனால இயங்கிகிட்டிருக்கிற அணு உலையையும் நிறுத்துங்கன்னு சொல்லி நியுயார்க் கவர்னர் போராடிக்கிட்டிருக்காராம்.

ஜெய்தாப்பூர்ல கட்டுற அணு உலையால ஏதாவது பிரச்சினைன்னா, அத கட்டுற கம்பெனி பிரான்ஸ்-ஐ சேர்ந்ததுங்கறதால பிரான்ஸ் தான் அந்த கம்பெனிக்கு அபராதம் போடுமாமே! இது என்னங்க நியாயம்? நம்ம போபால்ல நடந்த கொடுமைக்கே, நம்ம சட்டத்தால, நம்ம நாட்டிலேயே ஒன்னும் செய்ய முடியல. அப்புறம் நாம எங்க பிரான்சுக்கு போயி வழக்காடறது?! அட, பொணமான பின்னால அவன் குடுக்கற பணம் நமக்கு எதுக்குங்க?

இந்தியாவுல இருக்கற அத்தனை அணு உலையையும் மூடணும்னு நாடு தழுவின அளவுல போராட்டம் நடத்தப் போறதா பாபா அணு ஆராய்ச்சி மையத்தோட முன்னாள் விஞ்ஞானி பரமேஸ்வரன் சொல்லுதாரு.  

எப்படி பாத்தாலும் அணு தொழில்நுட்பத்தால உலகத்துக்கு நல்லது இல்லை, அணு சக்திய உபயோகிக்காதீங்கன்னு நோபல் பரிசு வாங்கின பத்து விஞ்ஞானிங்க உலகத்துக்கு வேண்டுகோள் வச்சிருக்காங்க. அவங்களும் விஷயம் தெரிஞ்சவங்க தானே!

இது இப்படி இருக்கும் போது, இந்தியாவில் இருக்கற எல்லா அணு உலைகளுக்கும் கொடுத்திருக்க அனுமதிய ரத்து செய்யனும்னு முன்னாள் எரிசக்தி துறை செயலர் சர்மா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.கே.வேணுகோபால், முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ், பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் எல்லாரும் சேந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்காங்க.


எல்லாம் சரி, கரண்டுக்கு என்ன செய்ய? ன்னு எல்லாரும் கேக்குதாக. பெரும்பாலான வீட்டுல மொட்ட மாடி இருக்குல்ல, அதுல சூரிய தகட பொருத்தினா சூரியன் இருக்க வரைக்கும் நம்ம யாருக்குமே எந்த பிரச்சினையும் இல்லாம கரண்டு கெடைக்குமே. என்ன, செலவு கொஞ்சம் அதிகமாகும். உசுர விட காசா முக்கியம்?

இந்த உலை வந்தா நாங்க மட்டும் கஷ்டப்பட போறதில்லைங்க. யாருக்குமே புண்ணியம் இல்லாம அநியாயத்துக்கு கடல்ல கெடக்குற மீனெல்லாம் வேற செத்து மெதக்க போகுது.

பத்து நாள்ல உங்க கருத்த நீங்க சொல்லப் போறதா பேப்பர்ல பார்த்தேங்க. நீங்க நல்லவங்க. சாதனையாளனான சாமானியன்.எங்க மண்ணோட மைந்தன். இந்தியாவோட பெருமைக்குரிய அணு விஞ்ஞானி. உங்களுக்கு எங்க கஷ்டம் தெரியும். நீங்க பொறுப்புல இருந்த போது பொக்ரான்ல அணுகுண்டு வெடிச்சீங்க. எங்களுக்கெல்லாம் நல்ல புத்தி சொல்லுற நீங்க உங்க வேலையோட காரணத்தால, மனசு விரும்பாம தான் செஞ்சிருப்பீங்கனு நம்பறோம். அய்யா பரமேஸ்வரன் போல நீங்களும் உங்களோட கருத்த வெளிபடையா இப்போ பேசலாமே.

நீங்க சொல்லப் போற வார்த்தையில தான் எங்க புள்ளைங்களோட உசுரு இருக்குதுங்க....

                                                                                       இப்படிக்கு,

இடிந்து போய் கரையிலேயே உட்கார்ந்திருக்கும் 

                                                                                        மீனவன்


An Open letter to Mr.Manmohan Singh...



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செவ்வாய், அக்டோபர் 18, 2011

புத்தம்புது பூமி வேண்டும்.




மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, அக்டோபர் 14, 2011

மா மழை போற்றுதும்...



பேருந்தின் 
ஜன்னலோரத்தில் நான்.

மேகம் கறுத்து 
என் தோளில் 
ஒரு துளி விழுந்த 
அதே நேரம் 
மண்ணிலும் ஒரு துளி. 
எது முதல் துளி?

வானில் 
பறவைக் கூட்டம் ஒன்று 
உற்சாக ஒலி எழுப்பி 
கடக்கிறது.

அவரைப் பந்தலின் கீழ் 
அண்ணி வயதொத்த பெண்ணுக்கு 
தலை சீவும் சிறுமி 
வானம் பார்த்து சிரிக்கிறாள்.

பேருந்தின் ஜன்னல்கள் 
பட படவென மூடப் படுகின்றன.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், அக்டோபர் 03, 2011

எருமையின் எமன்




கதை சொல்லி ரொம்ப நாளாச்சு. அதனால இப்போ ஒரு கதை. இந்த கதையில் வரும் மனிதர்கள், சம்பவங்கள், இடங்கள் யாவும் உண்மையே.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கோடம்பாக்கம் ஆற்காட் ரோட்டின் போக்குவரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த போது, கைப்பேசி அழைத்தது. சாலையில் வண்டி ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்ற நல்ல விஷயத்தை நான் கடைபிடிக்க முயற்சி செய்வதால், யார் கூப்பிட்டது என்பதை கவனிக்கவில்லை. (கலெக்டரா கூப்பிட்டிருக்கப் போறார்? நம் உயிரை / நல்ல உடலை விடவும் கலெக்டரா முக்கியம்?) வீட்டுக்கு வந்த பின்யாரோ அழைத்தது குயிலா…” பாடிக்கொண்டே பார்த்தேன். பிரகாஷ் ஆனந்த் கூப்பிட்டிருந்தான்.

பிரகாஷ் ஆனந்த் - தினமும் விழுப்புரத்தில் இருந்து சிங்கார சென்னைக்கு (சிங்காரம் தானே உலக பணக்காரரா இருக்கணும்!) வேலைக்கு வந்து போகும் எனது நண்பன். வார விடுமுறைக்கு நானும் ஊருக்கு போவேன் என்பதால் கூப்பிட்டிருப்பான் என யோசித்துக் கொண்டே அவனை கைப்பேசியில் அழைத்தேன். “ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்ல போறேன். வர்றியா?” என்றான். “முயற்சி பண்றேன். முடியலன்னா பாண்டிச்சேரில வர்றேன்என கூறி வைத்தேன்.

முகம் கழுவி, (துவைக்க வேண்டிய) துணிகளை எடுத்துக் கொண்டு, நண்பன் வெங்கடேசன் உதவியுடன் ஆற்காடு சாலையில் நகர்ந்து நகர்ந்து, கோடம்பாக்கம் மின்வண்டி நிலையத்தில் இறங்கி, விழுப்புரம் வரைக்குமான பயணச்சீட்டு அங்கேயே எடுத்துக் கொண்டு, தாம்பரம் வந்து சேர்ந்த போது மணி மாலை 5.45. ஒன்பதாம் நடைமேடையில் 6.05 க்கு கிளம்ப வேண்டிய விழுப்புரம் பாஸஞ்சர் நின்று கொண்டிருந்தது.

அஞ்சு நிமிஷம் முன்ன வந்திருந்தா ராமேஸ்வரத்த பிடிச்சிருக்கலாம், நினைத்துக் கொண்டே எனது வண்டிக்காக காத்திருந்தேன். அதே தேநீர் வியாபாரி, அதே பார்வை இழந்த பிச்சைக்காரர், அதே காலை சுற்றும் நாய், இதனிடையே அருகிருந்த எல்லோரிடமும் ஓடி சென்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காத்திருத்தலின் அவஸ்த்தையை காணாமல் போகச் செய்திருந்தான். (குழந்தையின் அம்மா, வழியனுப்ப வந்த தனது தகப்பனிடம் பேசிக் கொண்டிருந்தாள்). ஆறு மணிக்கு எட்டாவது நடைமேடைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது.

குழந்தையை கவனித்துக் கொண்டே இருந்ததில் கவனிக்க தவறி, சட்டென கவனித்தேன். மணி 6.12. கன்னியாகுமரியும், விழுப்புரம் பாஸஞ்சரும் இன்னும் நின்று கொண்டிருந்தது. ஆறு மணிக்கே கன்னியாகுமரி கிளம்பி இருக்கணுமே!, ஏன் இன்னும் கிளம்பல? என்ற சிந்தனையுடன் காதை தீட்டிக் கொண்டு அறிவிப்பை கவனித்தேன். நேரம் குறிப்பிடாமல் தாமதமாக கிளம்பும் என்று மட்டும் சொன்னார்கள். என்ன ஆச்சு என தெரிந்து கொள்ள பிரகாஷ் ஆனந்த்க்கு போன் செய்தேன்.

பெருங்களத்தூர் கிட்ட டிராக்ல எருமை மாடு வந்து அடிச்சு, ராமேஸ்வரம் எஞ்சினோட பிரேக் வால்வு உடஞ்சு போச்சு. அதான் எல்லா வண்டியும் நிக்குதுஎன்றான். “ஸ்பேர் எஞ்சின் தாம்பரத்துல இருக்குமாடாஎன்றேன். “இல்லைடா, எக்மோர்ல இருந்து வரணும். இல்லன்னா விழுப்புரத்துல இருந்து வரணும்என்றான்.

கன்னியாகுமரி, அடுத்தது விழுப்புரம் பாஸஞ்சர், அப்புறம் நிஜாமுதீன், அதுக்கப்புறம் தான் பாண்டிச்சேரி. என்னடா இது, எப்போ போய் சேருவோம்னே தெரியலயே, பஸ்ல போலாம்னாலும் இன்னைக்கு நிக்க கூட இடம் கிடைக்காது. மறுநாள் இரத்த தான முகாம் நடத்த வேண்டி இருந்ததால திரும்பியும் போக முடியாது. வேற வழியே இல்லை என காத்திருக்க முடிவு செய்தேன். இந்த களேபரங்களுக்கு நடுவில் என்னை மகிழ்வித்துக் கொண்டிருந்த அந்த குழந்தையை தொலைத்து விட்டிருந்தேன்.

நடைமேடையில் கூட்டம் அதிகமாயிருந்தது. காற்று வீசவே இல்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் இருந்தோம். அந்த தேநீர் வியாபாரியும், பார்வை இழந்த பிச்சைக்காரரும் தங்கள் வேலையில் மும்முரமாயிருந்தனர். அந்த நாயை காணவில்லை. பிரகாஷ் ஆனந்த் போன் செய்தான்.

வண்டிய மெதுவா நகத்தி வண்டலூர்ல லூப்ல போட்டுட்டான். இப்போ கன்னியாகுமரி எடுத்திடுவான். நான் அதில தான் போகப்போறேன். நீயும் வர்றதுன்னா வா.” என்றான். “இல்லைடா, நான் சூப்பர் ஃபாஸ்ட் டிக்கட் எடுக்கலடா. பாண்டிச்சேரி, விழுப்புரம் பாஸஞ்சர் எதை முதல்ல எடுக்கறானோ அதில வர்றேன்என்றேன்.

சரியாக 7.16-க்கு கன்னியாகுமரி கிளம்பியது. கூட்டம் கொஞ்சம் குறைந்தது. லேசாக காற்று வீசியது. 7.30-க்கு விழுப்புரம் பாஸஞ்சர் கிளம்பியது. நான் அதில் ஏறிக்கொண்டேன். எனது பக்கத்தில் கல்லூரி தோழர்கள் மூன்று பேரும், கணனி ஆசாமி ஒருவரும் உட்கார்ந்திருந்தனர். எல்லோரும் விடுமுறைக்காக ஊருக்கு செல்பவர்கள் தான்.

வழக்கம் போல பஸ்லயே போயிருக்கலாம். இவன் பேச்சை கேட்டு புதுசா டிரெயின்ல வந்தது தப்புடா.” கல்லூரி மாணவன் ஒருவன் குறை பட்டுக் கொண்டான். “ஒம்பது மணிக்கு மேல எங்க ஊருக்கு பஸ் இல்லைடாகவலைப் பட்டான் இன்னொருவன். “எங்க வீட்டுல தங்கிட்டு காலைல போடாஇது மூன்றாமவன்.

அஞ்சு டிரெயின் லேட். ஒரு ட்ரெயினுக்கு ஆயிரம் பேர்னு கணக்கு வச்சாலும் ஐயாயிரம் மணி நேரம் வேஸ்ட். இதுக்கெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாதா?” அலுத்துக் கொண்டார் சாஃப்ட்வேர் ஆசாமி.

கிளம்பும் அவசரத்தில் படிக்க புத்தகம் எடுத்து வைக்க மறந்து விட்டேன். எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. நான் மேலே ஏறி படுத்துக் கொண்டேன். ஒருவழியாய் வண்டி விழுப்புரம் வந்து சேர்ந்த போது மணி 10.30. ரொம்ப தாமதம் ஆனதால் என்னை அழைத்து செல்ல அப்பா ஸ்டேஷனுக்கே வந்திருந்தார்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டதும் அம்மா கேட்டாள், “என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ லேட்?”. நான் நடந்ததையெல்லாம் சொன்னேன்.

அம்மா சொன்னாள், “பாவம்டா மாடு.”

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...